சென்னை: விருகம்பாக்கம் சின்மயா நகரை சேர்ந்தவர் சாந்தி(48). வீட்டு வேலை செய்து வந்த சாந்தி, தனது மகள் மற்றும் மருமகனுடன் ஒன்றாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சாந்தியும் போரூரை சேர்ந்த பார்த்திபன்(59) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சாந்திக்கு ஒரகடம் எழுச்சூர் பகுதியில் உள்ள சுமார் 1200 சதுரடி கொண்ட இடத்தை பார்த்திபன் எழுதி கொடுத்துள்ளார்.
இதனையடுத்து சாந்திக்கும், பார்த்திபனுக்கும் சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பார்த்திபனிடம் சாந்தி தனக்கு நிலம் வேண்டாம், அதற்கு பதிலாக 6 லட்ச ரூபாய் பணம் வேண்டும் என கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 15ஆம் தேதி விருகம்பாக்கம் ஸ்கூல் தெருவில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் வைத்து சமரசம் பேசி கொள்ளலாம் என கூறி பார்த்திபன் சாந்தியை அழைத்துள்ளார்.
இதனை நம்பி சாந்தி, தனது மகள் மற்றும் மருமகனுடன் வழக்கறிஞர் அலுவலகத்திற்கு சென்று பணத்தை கேட்டு பார்த்திபனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு பார்த்திபன் 6 லட்ச ரூபாய் தர முடியாது 2 லட்ச ரூபாய் தருவதாக கூறியுள்ளார்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாந்தியின் கழுத்தில் குத்தியதுடன் இதனை தடுக்க வந்த அவரது மருமகன் மற்றும் மகள் கையில் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். பின்னர் பார்த்திபனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பலத்த காயமடைந்த சாந்தி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தனியார் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விருகம்பாக்கம் போலீசாருக்கு கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் டியூசன் ஆசிரியர் உள்பட இருவருக்கு ஆயுள் தண்டனை