சென்னையை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் மின்சார ரயில், பஸ்களில் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்நிலையில், கரோனா தொற்று வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் ஊரடங்கு காரணமாக ரயில், பஸ் போக்குவரத்து இயங்காததால், அவர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
இவர்களுக்கு ஆரம்பத்தில் தன்னார்வலர்கள் உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கி வந்தனர். பின்னர், படிப்படியாக அவர்களும் உதவிகளை வழங்குவதை கைவிட்டனர். இதனையடுத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், குடும்பம் நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, அவர்களுக்கு வீட்டு வாடகை, சாப்பாடு, செலவு உள்ளிட்டவைகளுக்கு பணமின்றி தவிக்கின்றனர்.
இதனையடுத்து, அவர்கள் மற்ற மாநிலங்களை போல, தமிழ்நாடு அரசும் நிவாரண உதவி தொகை வழங்க வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர். இருந்த போதிலும் அவர்களுக்கு அரசு நிவாரண உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி தாசில்தார் சங்கிலிரதி, காவல் துறையினர், மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால், அவர்கள் எங்களுக்கு நிவாரண தொகை வழங்க அரசு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என திட்டவட்டமாக கூறினர். இதனையடுத்து, அலுவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட நிர்வாகத்திடம் உங்களது கோரிக்கையை கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக உறுதியளித்தனர்.இதனையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.