சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் நடப்பாண்டில் மாணவர்களில் சிறப்பு பிரிவினர்களான முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேரடி முறையில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நாளை (அக். 20) காலை 9 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில், 10 எம்பிபிஎஸ் இடங்களும், ஒரு பிடிஎஸ் இடமும் உள்ள நிலையில், 50 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு பிரிவில் 7 எம்பிபிஎஸ் இடங்கள், ஒரு பிடிஎஸ் இடத்திற்கு 50 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் பிரிவில், எம்பிபிஎஸ் படிப்பில் 212 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 9 இடங்களும் உள்ள நிலையில், ஒட்டுமொத்தமாகவே 47 பேர் மட்டுமே தகுதி பெற்று கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர்.
விளையாட்டு வீரர்கள் பிரிவில் 8 பேருக்கும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 11 பேருக்கும் கலந்தாய்வில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் முன்னாள் ராணுவத்தினரின் மகள் பாலினிஸ்ரீ கூறும்போது, "முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு ஒதுக்கீட்டில் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டேன். நீட் தேர்வில் 570 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். ஆனாலும் இடம் கிடைக்கவில்லை. காத்திருப்பு பட்டியிலில் வைத்துள்ளேன். முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்" என தெரிவித்தார்.