கரோனா பரவல் காரணமாக கோயில்கள் மூடப்பட்டதால், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடத்தப்பட வேண்டிய விழாக்கள், பண்டிகைகளை நடத்துவது குறித்து, மத தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்து முடிவெடுக்கக்கோரி, திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கை ஏற்கனவே விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, வரும் ஜூலை வரை ஸ்ரீரங்கம் கோயிலில் நடக்கவுள்ள விழாக்கள், பண்டிகைகள் எப்படி நடத்துவது குறித்து, மத தலைவர்களுடன் கலந்து பேசி, ஆறு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று(பிப்.17), இவ்வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கரோனா தொற்றின் காரணமாக மத தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லை என இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் தெரிவித்திருப்பதாகவும், கோயில் உற்சவம் நடத்த முடியாது எனக் கூறுவது ஆகம விதிகளுக்கு எதிரானது என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது .
வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற தவறிய இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி, நீதிமன்ற அவமதிப்பு எடுக்க நேரிடும் என எச்சரித்தனர். மேலும், நாளை (பிப்.18) காலை இணை ஆணையர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: பிரதமர் அலுவலக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் மோசடியில் தொடர்பு!