அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து தற்போதுள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் எனவும் புதிதாக தோற்றுவிக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் எனவும் பெயரிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதற்கான சட்ட முன்வடிவை தமிழ்நாடு அரசு நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தியது. பின் அது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் கடந்த மூன்று வாரங்களைக் கடந்தும் அரசின் முடிவுக்கு இதுவரை ஒப்புதல் கிடைக்காமல் உள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்புத் தகுதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதனைதொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தை அண்ணா சீர்மிகு பல்கலைக்கழகம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் என்றும் இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக அரசாணை வெளியிட்டது.
அது குறித்து ஆராய ஐந்து அமைச்சர்களைக் கொண்ட குழுவையும் தமிழ்நாடு அரசு அமைத்தது. ஆனால் சிறப்புத் தகுதி வழங்கும் மத்திய மனிதவள அமைச்சகத்தின் அறிவிப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை.
அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்புத் தகுதி வழங்கப்பட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு 500 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்பதால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என்பதால் அரசு சிறப்புத் தகுதியை ஏற்க தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், "சிறப்புத் தகுதி வழங்கப்பட்டால் அண்ணா பல்கலைக்கழகமே அதற்கான நிதித்தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும்" என்று தெரிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் சிறப்புத் தகுதியை ஏற்பதில் சிக்கல் உள்ளதாக உயர் கல்வித் துறை தெரிவித்தது. அத்துடன் சிறப்புத் தகுதியை தமிழ்நாடு அரசு ஏற்பது தொடர்பாக மத்திய அரசு நிர்ணையித்த காலக்கெடுவும் முடிவடைந்தது.
இந்த நிலையில்தான் மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது தொடர்பான சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு இதுவரை அதற்கான ஒப்புதல் கிடைக்காமல் உள்ளது.