Collapsed building demolishes at Tiruvottiyur: சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் டி பிளாக்கில் ஒரு பகுதி கட்டடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
நல்வாய்ப்பாக, இந்த விபத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில் கட்டடத்தின் தரம் குறித்தும், அப்பகுதியில் உள்ள மண் வளம் குறித்தும் வல்லுநர் குழுவினர் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். இடிபட்ட கட்டடத்தின் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டு அங்கு மீட்கப்பட்ட நகை, சிலிண்டர், பீரோ உள்ளிட்டப் பொருள்கள் அனைத்தும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த பிளாக்கில் குடியிருந்த 17 குடும்பத்தினருக்கு திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. மீதி உள்ள நபர்களுக்கு வீடுகள் ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இடிந்து விழுந்த கட்டடத்தில் மற்றொரு பகுதி இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் இடிந்து விழுந்த கட்டடத்தின் அருகிலிருந்த சி பிளாக் மற்றும் இ பிளாக் ஆகிய இரண்டு பிளாக்குகளில் வசித்து வந்த சுமார் 120 குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதன் அருகில் இருந்த பி பிளாக் குடியிருப்பில் உள்ள வீடுகளில் வசித்தவர்களும் தங்களின் பாதுகாப்புக்கருதி பாதிப்பேர் வீடுகளை காலி செய்துள்ளனர்.
இடிந்து விழுந்த கட்டடத்தின் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில் அதன் மற்றொரு பகுதிக் கட்டடம் இடிப்பதற்குத் தயார் நிலையில் உள்ளன. இதற்காக பொதுமக்கள் யாரும் அப்பகுதியில் செல்லாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு வீடுகள் இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
வீடு இடிப்பது தொடர்பாக குடிசை மாற்று வாரிய அலுவலர்களும், சென்னை மாநகராட்சி அலுவலர்களும் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நாளை முன்ஜாமீன் மனு விசாரணை; ராஜேந்திர பாலாஜி இன்று கைது