சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூலை 3) சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மாதாந்திர பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். முதலில் அவர் உடல்நிலை சரி இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் பரவிய நிலையில், அவர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பரிசோதனைகள் நிறைவு பெற்று முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி, போலீஸ் பாதுகாப்புடன் வீடு திரும்பினார். முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு முன்னதாகவும் உடல் பரிசோதனைக்காகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி முதுகுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று இருந்தார். மேலும், அதற்கும் முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் கரோனா தொற்று காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.