தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய குளச்சல் தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ், கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், லெட்சுமிபுரம் கிராமம், மண்டைக்காடு புதூர் என்னும் இடத்தில் 16.6.2019 அன்று புதூரைச் சேர்ந்த சிறுவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கி சகாய ரெகின், இன்பென்டர் ரகீட், சச்சின் ஆகிய மூன்று சிறுவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு, சச்சின் உடல் 16.6.2019 அன்றும், சகாய ரெகின் என்பவரது உடல் 17.6.2019 அன்றும், இன்பென்டர் ரகீட் என்பவரது உடல் 18.6.2019 அன்றும் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினரின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்’ என தெரிவித்தார்.