கரோனா வைரஸ் தொற்றுநோயின் பாதுகாப்பு நடவடிக்கையில் களப்பணி ஆற்றிவரும் 108 ஆம்புலன்ஸ் இ.எம்.டி பைலட், கால் சென்டர் ஊழியர்களுக்கு மருத்துவ பணியாளர்களுக்கு இணையான அரசு அறிவித்த மாத சிறப்பு ஊதியம், மருத்துவ காப்பீட்டு வசதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறும்போது, ”2008ஆம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவி திட்டம் தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இருந்துவருகிறது. சுமார் 4 ஆயிரத்து 800 தொழிலாளர்கள் தற்போது கரோனா வைரஸ் தொற்றுநோய் பாதுகாப்பு பணியில் பல்வேறு பொருளாதார பிரச்சனைகளுக்கு மத்தியில் எங்களை ஈடுபடுத்தி பொதுமக்களுக்கு மருத்துவ களப்பணி ஆற்றிவருகிறோம்.
மத்திய அரசின் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தங்களை முழு ஈடுபாட்டுடன் பொதுமக்களுக்கு மருத்துவ பணியாற்றி வருகிறோம். ஆகவே சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்த மாத சிறப்பு ஊதியத்தை எங்களுக்கு வழங்க வேண்டும்.
இச்சேவையில், நோய் தொற்று அபாயம் அதிகமாக இருந்தபோதிலும், எங்களை முழு அர்ப்பணிப்பு உணர்வோடு பொதுமக்கள் உயிரை பாதுகாக்க பணியாற்றிவருகிறோம். எங்கள் பொருளாதார சூழல், குடும்ப சூழல், தொழிலாளர் நலன் கருதி மத்திய அரசு அறிவித்த ஐந்து லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீட்டு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்” என்றனர்.
மேலும், நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களும் ஒரு மாத சம்பளத்தை சிறப்பு ஊதியமாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.