சென்னை, எம்.ஆர்.சி நகர் பகுதியில் அமைந்துள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் 900க்கும் மேற்பட்டோர், அப்பள்ளியில் பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்த்தப்படுவதாக சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.
அதில், அப்பள்ளியில், பாலியல் ரீதியாகவும் உடல் அமைப்பை வைத்தும், கெட்ட வார்த்தைகளால் திட்டியும் பள்ளி நிர்வாகிகள் மாணவிகளை துன்புறுத்தல் செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக பல ஆண்டுகளாக புகார் அளித்தும் நிர்வாகம் தரப்பில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்து இருந்தனர்.
இந்தப் புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த சம்மனை அடுத்து செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் முதல்வர் உள்பட ஐந்து நிர்வாகிகள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜராகினர். இவர்களிடம் ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி விசாரணை மேற்கொண்டு வருகின்றார். 900க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கொடுத்த புகார் என்பதால் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படும் இந்த விவகாரத்தில் ஆணையத்தின் விசாரணைக்கு பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தெரியவரும்.
மேலும் இந்தப் பள்ளி மீது பாலியல் அத்துமீறல் விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் தற்போது வரை புகார் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.