சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் நிறுவனத் தலைவர் ரா. சரத்குமார் தலைமையில் அனைத்து மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார், கட்சியின் புதிய கொடியை அறிமுகப்படுத்தி கொடியை ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் கூறியதாவது, அதிமுக கூட்டணியில் தான் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இருக்கிறது. பாஜக உடன் அதிமுக பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தான், மற்ற கட்சியுடன் கூட்டணி குறித்து பேசுவார்கள். சமத்துவ மக்கள் கட்சி மக்களை சந்தித்த பிறகு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம். இந்த முறை தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார்.
தொடர்ந்து, ரஜினியின் உடல் நலம் தான் முக்கியம். அதனால் அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். அமைச்சர்கள் மீது திமுக கொடுத்த புகார் உண்மையாக இருந்தால்,யாராக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டும். உண்மை இல்லையென்றால் தேர்தல் நேரத்தில் சொல்லப்படும் கருத்தாக மட்டும் அதை எடுத்து கொள்ளலாம்.
ஊழல் பட்டியலை கொடுக்கும் திமுகவின் 2ஜி ஊழல் பற்றி என்ன சொல்வது. அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்றால் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுவோம்; பேச்சுவார்த்தை நடந்தால் உரிய நேரத்தில் தொகுதி குறித்து பேசப்படும். திமுக என்னை கூட்டணிக்கு அழைத்தால் பார்த்துக்கொள்ளலாம். அழைப்பதற்கு முன்னாள் கருத்து சொல்ல முடியாது. நான் எம்ஜிஆருக்கு பக்தனாக இருந்தவன்.
அரசியலுக்கு, மருத்துவர்கள், நடிகர்கள், இளைஞர்கள் என எல்லாரும் வர வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தை அறிவிக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன். உதயநிதி, குருமூர்த்தி நாகரிகமாக பேசவேண்டும். அவர்கள் பேச்சுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்து இருக்கிறேன் என்றார்.
சசிகலா வருகை குறித்த கேள்விக்கு அவர் வந்த பிறகு அவரது செயல்பாடுகள் பார்த்த பிறகு அது குறித்து கருத்து சொல்கிறேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு துக்ளக் குருமூர்த்தி - முத்தரசன் விமர்சனம்