கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். பல்பொருள் அங்காடி, மார்க்கெட் உள்ளிட்ட கடைகளுக்கு செல்லும் மக்கள், சமூக இடைவெளி விட்டுச் சென்று தங்களுக்கு தேவையானவற்றை வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இட நெருக்கடியில் செயல்பட்டு வரும் மார்க்கெட்டுகள், தற்காலிகமாக பகுதியின் முக்கிய இடத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், வில்லிவாக்கம் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு மாற்றும் விதமாக வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் ரெங்கநாதன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பேருந்து நிலையத்தில் மார்க்கெட் அமைப்பதற்கும், சமூக இடைவெளியை பின்பற்றவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் மார்க்கெட் பகுதிக்குச் சென்று ஒவ்வொரு கடையாக நாளை முதல் பேருந்து நிலையத்தில் கடை அமைக்கப்பட வேண்டும் என ஒலிப்பெருக்கி மூலம் வலியுறுத்தி குலுக்கல் முறையில் அவர்களுக்கு டோக்கன்களும் வழங்கப்பட்டன.
மேலும், நாளை அமையவுள்ள தற்காலிக மார்க்கெட் பகுதியில் துப்புரவு பணியாளர்கள் கிருமி நாசினிகளை தெளித்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவா? எங்களுக்கா?...சுதந்திரமாக நடமாடும் விழுப்புரவாசிகள்!