சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் தங்கம் ஸ்டீல் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பி.எஸ். வடிவாம்பாள், ஸ்ரீனிவாசன் ஆவார்கள்.
இவர்கள் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை உள்ள காலக்கட்டத்தில் சென்னை எழும்பூரில் உள்ள எஸ்பிஐ வங்கியில், போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து ரூ.109 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
இந்தக் கடன் வாங்கியதில் ரூ.89 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாக எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது தெரியவந்துள்ளது.
மேலும் தங்கம் ஸ்டீல் என்ற நிறுவனமும், பிஎஸ்கே ஸ்டில் என்ற பெயரில் ஒரு நிறுவனமும் ஒரே முகவரியில் செயல்பட்டு மோசடி செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது .
இதனையடுத்து துணை பொது மேலாளர் ரவிச்சந்திரன் கடந்த மாதம் சிபிஐயிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில் சென்னை பெசன்ட் நகரிலுள்ள ராஜாஜி பவனில் செயல்பட்டுவரும் சிபிஐயின் பொருளாதார குற்றப்பிரிவு, தனியார் ஸ்டீல் நிறுவன உரிமையாளர்கள் பி.எஸ். வடிவாம்பாள், ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று சென்னை அண்ணாநகரில் உள்ள அவர்களது இல்லத்திலும் தங்கம் ஸ்டீல் நிறுவனத்தின் அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையை அடுத்து வழக்கு தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது