சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் ஆகியவை காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் ஆகியவை காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை, அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை : ”மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று தென்மேற்கு திசையில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: தாளவாடி மலைப்பகுதியில் பலத்த மழை: அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் மழைநீர்