சென்னை: எழும்பூர் புதுப்பேட்டை நெடுஞ்சாலை பிளாட்பாரம் பகுதியில் வசித்துவந்த 59 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புளியந்தோப்பு கே.பி. பார்க் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. அவர்களுக்கு வீடுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட்டன.
வீடு பெற்றவர்கள் பெரும்பாலானோருக்கு 9, 10, 11ஆவது தளங்களில் ஒதுக்கப்பட்டுள்ளது. வீட்டின் கட்டடம் பழுதடைந்த நிலையில் அப்படியே உள்ளது எனவும், இரவு நேரங்களில் லிப்ட் முறையாக வேலைசெய்வது இல்லை எனவும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் சரியாக இல்லை எனவும் அங்கு குடிபெயர்ந்தவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் கூறுகையில், "ஏற்கனவே புளியந்தோப்பில் கட்டப்பட்ட கேபி பார்க் கட்டடத்தின் தரம் குறித்து ஐஐடி சார்பில் 26 பக்கங்கள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை குறித்து இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் தற்போது எழும்பூரில் வசித்தவர்களுக்கு இங்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வீடுகள் ஒதுக்கப்படும் விதியான குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வீடுகள் கீழே ஒதுக்கப்படும்.
தற்போது பெரும்பாலானோருக்கு 9, 10, 11ஆவது தளங்களில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் லிப்ட் முறையாக வேலை செய்யாததால், புதிதாக குடிபெயர்ந்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசின் செயலர் ஆஜராக உத்தரவு