சென்னை வள்ளுவர் கோட்டத்தில், இந்து மக்கள் கட்சியின் சார்பாக குடியுரிமை சட்டத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு, குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாகவும் திமுகவிற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத் தெரிவிக்கையில், "இந்திய குடியுரிமை சட்டத்தில் எந்த இடத்திலும் இந்தியர்கள் பற்றி பேசவில்லை. இந்துக்கள் எங்கு துன்புறுத்தலுக்கு ஆளானாலும் அவர்கள் இங்கு தாய் நாட்டுக்குத்தான் வர வேண்டும். ஆனால் இதை இஸ்லாமியர்களை வேண்டுமென்று காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக போன்ற கட்சிகள் தூண்டிவிட்டுவருகின்றன.
தமிழ்நாட்டில் மதம் நல்லிணக்கத்தையும் சட்ட ஒழுங்கையும் சீர்குலைக்க திமுக நாளை பேரணி நடத்தவுள்ளது. தற்போது எங்கள் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் தமிழர்கள் குடியுரிமை சட்டத்தை வரவேற்கின்றோம் என்பதைக் காட்டுவதற்குத்தான்.
மேலும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என கூறிவிட்டு தற்போது வங்கதேச நாட்டிற்கு குடியுரிமை கேட்டு இரட்டை வேடம் போடுகின்றன. அனைத்தும் இஸ்லாமியர்கள் வாக்கு வங்கிகளை குறிவைத்து செய்துவருகின்றனர்.
ஈழத்தமிழர்கள் இலங்கையில் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால் குடியுரிமை சட்டத்தை வேண்டுமென்றே இலங்கைத் தமிழர்களுடன் ஒப்பிட்டு பேசிவருகின்றனர். அவர்களுக்கு இரட்டை குடியுரிமை என்ற அதிமுக கோரிக்கை வரவேற்கத்தக்கது. மேலும் இலங்கை தமிழர்கள் அகதிகள் அல்ல; அவர்களுக்கான நாடு இந்த பாரத நாடு" எனக் கூறினார்.
தொடர்ந்து இலங்கை தமிழ் இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "எங்கெல்லாம் இஸ்லாமியர்கள் அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறார்களோ அங்கு எல்லாம் தமிழர்களால் வாழ முடியவில்லை. எங்களுக்கு இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசத்திலுமிருந்தும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை சட்டம் வழங்குவதில் பிரச்னை உள்ளது. ஆகையால் இலங்கை இஸ்லாமிய தமிழர்களுக்கு வழங்க முடியாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படியுங்க:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி - அழைப்பு விடுத்த திமுக!