சென்னை: கடந்த 2018-யில் தமிழன்பன் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தைச் சுற்றி சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்களை சரி செய்யுமாறு சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் வாரியம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டதை நிறைவேற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
கழிவுநீர் கால்வாய்கள் மூடப்படும்: கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற எல்லைக்கு அருகில் உள்ள பகுதியை சிறுநீர் கழிப்பதற்காகவோ அல்லது கழிப்பறைக்காகவோ பயன்படுத்துவதைத் தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி, உயர் நீதிமன்றத்தின் எல்லைச்சுவர்களை இயற்கை உபாதைகளைக் கழிக்க பயன்படுத்துவதைத்தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியை அழகுபடுத்தும் வகையில் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு, சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கழிவுநீர் கால்வாய்களை மூடப்படாமல் இருந்தால், அவற்றை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்காலிக கழிப்பறை: பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் நடவடிக்கைக்குப் பாராட்டு தெரிவித்தனர். மேலும், என்.எஸ்.சி.போஸ் சாலையில்(உயர் நீதிமன்றம் அமைந்திருக்கும் சாலை) உள்ள சிறு கடைக்காரர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக தற்காலிக கழிப்பறை வைக்கலாம் என்றும், தற்காலிக கழிப்பறையை அமைப்பதற்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்யலாம் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
கழிவுநீர் கால்வாய்கள் கவனிக்கப்படாமலோ அல்லது மூடி சேதமடைந்திருந்தாலோ, அதை உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், அப்போதுதான் எந்தவிதமான அசம்பாவிதத்தையும் தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு உற்சாகத்துடன் கும்பாபிஷேகம்!