தாம்பரம் - திண்டிவனம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய உரிமம் இன்றுடன் காலாவதி ஆவதால், இந்த சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கக் கோரி திருச்சியைச் சேர்ந்த ஜோசப் சகாயராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த 2002ஆம் ஆண்டு பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளை 564 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கிய தனியார் நிறுவனம், இதுவரை 1,114 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோரது அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல், ஒப்பந்தக் காலம் முடிந்துவிட்டால் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கூற முடியாது எனவும், மாறாக விதிகளின்படி 40 சதவீத சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் எனவும் வாதிட்டார். அதேபோல், இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனவும், குறிப்பாக, மதுரவாயல் – வாலாஜாபாத் பகுதி மிக மோசமாக பராமரிக்கப்படுவதாகவும் மத்திய அரசு வழக்கறிஞரிடம் சுட்டிக்காட்டினர்.
இந்த சாலை குழிகள் நிரப்பப்பட்டு, முறையாக பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய மத்திய அரசு வழக்கறிஞர், இது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்வதாக உறுதியளித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், நெடுஞ்சாலைகள் பராமரிப்பு குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.