சென்னை: சென்னை செனாய் நகரில் உள்ள புல்லா அவென்யூவில் இந்தியன் வங்கிக் கிளை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு இந்த ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க வந்தவர்கள் நீண்ட நேரமாக சந்தேகத்திற்கிடமான வகையில் ஏ.டி.எம்-மில் அதிக அளவில் பணம் செலுத்திக் கொண்டிருந்த நபரைக் கண்டு காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.
இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த அமைந்தகரை ரோந்துப்பணி காவலர்கள் ஏ.டி.எம்-மில் பணம் செலுத்திக்கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் லட்சக் கணக்கில் பணம் இருந்ததாலும், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாலும் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
முதலாளியின் கறுப்பு பணம்
விசாரணையில் அந்த நபர் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த யூசஃப் அலி (39) என்பதும் அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஜி.ஆர் முகமது என்பவரிடம் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
மேலும், தனது முதலாளியான ஜி.ஆர் முகமது மலேசியாவில் தொழிலதிபராக இருந்து தற்போது என்.எஸ்.சி போஸ் சாலையில் வசித்து வருவதாகவும், அவர் அளிக்கும் கறுப்பு பணத்தை இரவு நேரங்களில் ஏடி.எம் மையத்தில் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது இரவு ஊரடங்கு என்பதால் முன்னதாகவே பணத்தை பெற்று செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதே போல் 11 லட்சம் ரூபாய் பணத்தை ஏ.டி.எம்-மில் செலுத்த வந்தபோது, அதிக பணம் செலுத்த வேண்டும் என்பதால் பதற்றதுடன் இருந்ததாகவும் போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் யூசஃப் அலி ஏ.டி.எம்-மில் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏற்கனவே செலுத்திவிட்ட நிலையில் மீதமுள்ள 5 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் பணத்துடன் அவரைப் பிடித்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
குருவியாக இருக்க வாய்ப்பு
மேலும், அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில் அவர் குருவியாக செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யூசஃப் அலியையும், அவரது முதலாளியான ஜி.ஆர் முகமது என்பவரையும் வரவழைத்து வருமான வரித்துறை புலனாய்வு அலுவலர்கள் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:குடும்பத் தகராறில் மனைவி அடித்துக் கொலை: கணவர் கைது