சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றின் தினசரி பாதிப்பு குறைந்துவருகிறது. நேற்றைய நிலவரப்படி, 20 ஆயிரத்து 421 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. குறிப்பாக சென்னையில் மட்டும் ஆயிரத்து 644 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
கரோனா பரவல் அதிகமாக இருந்தபோது மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லாததால், பொதுமக்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். கரோனா பாதிப்புக்கு உள்ளான பலரும் இது குறித்த தகவலை அரசுக்குத் தெரியப்படுத்தாமல் தாங்களாகவே மருத்துவமனைகளில் மருந்துகளைப் பெற்று சிகிச்சை எடுத்துவருவதாகத் தகவல் வெளியானது.
இதற்கு செக் வைக்கும்விதமாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி,சென்னையில் பாராசிட்டமால், அசித்ரோமைசின் ஆகிய கரோனோ தொடர்புடைய மருந்துகளை வாங்குபவர்களின் விவரங்களை மருந்தகங்கள் சென்னை மாநகராட்சிக்கு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கண்காணிப்புப் பணிகளுக்காக 15 மண்டலங்களுக்கும் அலுவலர்கள் நியமனம்செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'இனி கரோனா அறிகுறி உள்ளவர்களுக்கும் மெடிக்கல் கிட் வழங்கப்படும்' - மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்