சென்னை உயர் நீதிமன்ற அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில்,
'மண்ணடியில் உள்ள மாநகராட்சி உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிக்காக தன்னார்வலர் என்ற அடிப்படையில் பணிஅமர்த்தப்பட்டு இருந்ததாகவும், அப்போது மண்ணடி பகுதி மாநகராட்சி உதவிப் பொறியாளர் கமலக்கண்ணன் என்பவர், செல்போனில் தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாகவும் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பான ஆடியோவையும் காவல் துறையிடம் சமர்ப்பித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடமும் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடியாக உதவிப் பொறியாளர் கமலக் கண்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்தநிலையில் ஆடியோவை ஆதாரமாக வைத்து, விசாரணை செய்த உயர் நீதிமன்ற அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் மாநகராட்சி உதவிப்பொறியாளர் கமலக்கண்ணன் மீது 354(ஏ)- பாலியல் தொல்லை கொடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து அயனாவரத்தில் வசித்து வரும் உதவிப் பொறியாளர் கமலக் கண்ணனை கைது செய்ய காவல் துறையினர் சென்றபோது, அவர் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. அவரைத் தேடிக் கொண்டு இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.