சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. தற்போது ஆயிரத்து 500 நபர்கள் மட்டுமே சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இரண்டாம் அலை பாதிப்பு உச்சமாக இருந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக ஏராளமானோர் உயிரிழந்தனர்.
தற்போது கரோனா மூன்றாம் அலை குறித்த மருத்துவர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கை வசதிகள், புதிதாக ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணிகள் ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மூன்று ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைப்பு
முதற்கட்டமாக சென்னை, தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில், நிமிடத்திற்கு 500 லிட்டர் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிக்கும் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுவதாக, மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னையில் மணலி, ஈஞ்சம்பாக்கத்திலும் புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: போதைப்பொருள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை வேண்டும் - விக்கிரமராஜா