சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 45 வயதான கூலித்தொழிலாளி சாலமான், கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதி கரோனா அறிகுறிகளுடனும் மூச்சுத் திணறலுடனும் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் நுரையீரல் 90 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக அவருக்கு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காக்கும் கருவிகள் மூலம் ஆக்சிஜன் தொடர்ந்து செலுத்தப்பட்டது. அதனுடன் விலை உயர்ந்த மருந்துகளும் அளிக்கப்பட்டன.
மேலும்,அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 60 நாள்கள் வரை அவர் சிறப்பு சிகிச்சைப் பெற்றும், மருத்துவக் கண்காணிப்பில் இருந்தும் வந்தார். அதனைத் தொடர்ந்து நோயிலிருந்து முழுவதுமாக குணமடைந்த அவர், சென்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிக அளவு நுரையீரல் பாதிப்புகளுடன் அனுமதிக்கப்பட்டு, அதிக நாள்கள் உள்நோயாளியாக தங்கியிருந்து முழுவதும் குணமடைந்த நோயாளி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.