சென்னை அம்பத்தூரை அடுத்த கருக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா. இவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று வழக்கம்போல் அம்பத்தூர் தொழிற்பேட்டையை அடுத்த பட்டரைவாக்கம் சாலை வழியாக தனது இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஆஷா அணிந்திருந்த ஏழரை சவரன் தங்க நகையை பறித்துச் சென்றனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த காவலர் ஆஷா அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி தப்பினார்.
பின்னர், இச்சம்பவம் குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: காவலர் மனைவியிடம் தங்க சங்கிலி பறிப்பு!