இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 30ஆம் தேதி சீனாவிலிருந்து வந்த மாணவர் மூலமாக முதல் தொற்று ஆரம்பமானது. அதற்கு பிறகு படிப்படியாக அது பரவத்தொடங்கியது. கரோனா நோய் என்பது ஒரு கொடிய தொற்றுநோய் என்பதை உணராமல் பிரதமர் மோடி பிப்ரவரி 24ஆம் தேதி அகமதாபாத் விளையாட்டு மைதானத்தில் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, ‘நமஸ்தே டிரம்ப்’ வரவேற்பு மடலை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது கரோனா நோயின் அச்சம் அமெரிக்கா அதிபருக்கோ, இந்திய பிரதமருக்கோ இல்லாததன் விளைவைத்தான் அமெரிக்க, இந்திய மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 26 மாநிலங்களுக்கு ரூபாய் 11,051 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது மத்திய அரசு. இந்த நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்குவதில் கடுமையான பாரபட்சம் பாஜக அரசால் காட்டப்பட்டிருக்கிறது. கரோனா நோயினால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூபாய் 1,611 கோடி ஒதுக்கியிருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு ரூபாய் 510 கோடி ஒதுக்கியிருக்கிறது.
ஆனால் குறைவான பாதிப்புள்ள உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 966 கோடி, மத்தியப் பிரதேசத்திற்கு ரூபாய் 910 கோடி, பிகாருக்கு ரூபாய் 708 கோடி, குஜராத்துக்கு ரூபாய் 662 கோடி, ஆனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிற கேரளாவிற்கு ரூபாய் 157 கோடி தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பாஜக அரசின் அப்பட்டமான பாரபட்சமான போக்கைப் புரிந்துகொள்ளலாம்.
மேலும் மக்கள் ஊரடங்கு காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒவ்வொரு ஜன் தன் வங்கி கணக்கிலும் ரூபாய் 7,500 மத்திய அரசு செலுத்தவேண்டும். தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆணையம் இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 43.7 கோடி என்று கணக்கிட்டிருக்கிறது. இதில் விவசாயத் துறையில் 24.6 கோடி, கட்டுமான தொழிலில் 4.4 கோடி மற்றும் உற்பத்தி, சேவை துறைகளில் மீதி தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூன்று கோடி பேர் உள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்கள், நிவாரண உதவிகள் எதுவும் சென்றடைவதில்லை. இவர்களுக்கு மக்கள் ஊரடங்கு காலமான மூன்று மாத காலத்திற்கு உதவித்தொகையை நேரடியாக, ரொக்கமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, மத்திய பாஜக அரசு நாட்டில் நிலவுகிற அசாதாரண சூழலில் போர்க்கால அடிப்படையில் அசாதாரண நடவடிக்கைகளை எடுப்பது மிக மிக அவசியமாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...உணவின்றி தவித்த நாடோடிகள்... உதவிக்கரம் நீட்டிய நெல்லை நிர்வாகத்துக்கு ஈடிவி பாரத் நன்றி!