மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கில் வெளிமாநிலத்திலிருந்து தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்பவர்களும், அவசரத் தேவைக்காக வெளியூர் செல்பவர்களும் தமிழ்நாடு அரசிடம் உரிய அனுமதி பெற்றுச் செல்ல இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்தியது.
இதில் நடைமுறையில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் இருக்க ஒருங்கிணைந்த இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் மக்கள் ஆன்லைன் வழியாக அனைத்து ஆவணங்களையும் சமர்பித்த பிறகு இ-பாஸ் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மாநிலத்தில் இ-பாஸ்கள் வைத்திருப்போரின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாக சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சென்னையில் இ-பாஸ் வழங்குவதற்கு என்று பணியமர்த்தப்பட்ட இரண்டு அலுவலர்கள் உள்ளிட்ட சிலர் சட்டவிரோதமாக இ-பாஸ்களை அளித்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து சென்னை மாநகராட்சியில் இ-பாஸ் வழங்கும் அலுவலரான வருவாய் ஆய்வாளர் குமரன், எம்கேபி நகரைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் உதயகுமார், அம்பத்தூரைச் சேர்ந்த ஓலா கார் ஓட்டுநர்களான தேவேந்திரன், வினோத்குமார் மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் ஆகிய ஐந்து பேர் இரண்டு நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இ-பாஸ் விண்ணப்பித்தாலும் உடனடியாக அனுமதி கிடைக்காமல் இருந்த சூழலைப் பயன்படுத்தி இ-பாஸ் வழங்க ஒப்புதல் அளிக்கும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குமரன், உதயகுமார் உள்ளிட்டோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.