மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்காவின் கீழே உள்ள தரைத்தளப் பகுதியில் நடந்துவருகிறது. மெட்ரோ ரயில் பணிக்காக திரு.வி.க.நகர் பூங்காவில் இருந்த பழமையான மரங்கள் வெட்டப்பட்டதை எதிர்த்தும், சுற்றுச்சூழல் துறையின் அனுமதியின்றி இப்பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ ஆகியவை மேற்கொண்டு வருவதாகக்கூறி, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 45 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், ‘‘ஷெனாய் நகர் வழியாக மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக திருவிக பூங்காவை மெட்ரோ ரயில் நிர்வாகம் கையகப்படுத்தியது. சுரங்கப்பாதை பணிகள் முடிந்ததும் அந்த பூங்காவை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவருவோம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால் தற்போது இந்த உறுதியை மீறி பூங்கா அமைந்துள்ள பகுதியில் ஸ்டேஷன் மற்றும் பயணிகள் வசதி மையம், மால்கள் அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது சட்டவிரோதம்’ என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘ஒருபுறம் வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் மரங்கள் வெட்டப்படும்போது மறுபுறம் சுற்றுச்சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, ஷெனாய் நகர் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக 1250 பல்வகை மரங்கள் நடப்படவுள்ளதாக அலுவலர்கள் உறுதியளித்துள்ளனர்.
அந்த உறுதியின்படி ஷெனாய் நகர் திரு.வி.க.பூங்காவில் புதிதாக 1250 மரங்களை நட்டு அந்த பூங்காவை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வரவேண்டும் என உத்தரவிட்டு மெட்ரோ ரயில் பணிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தனர்.