சென்னை: திருச்செந்தூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணத்திற்கு பின், 2017 செப்டம்பர் 12 இல் நடத்திய பொதுக் குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் பதவியை கலைத்து விட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என புதியதாக இரு பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளருக்கான அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை
அதிமுக கட்சி விதிப்படி, புதிய பதவிகளை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்பதால், இது சம்பந்தமாக கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தக்களை ஏற்று தேர்தல் ஆணையம் 2018 மே 4ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜெயலலிதா மரணத்தின் போது அமலில் இருந்த விதிகளை பின்பற்ற அதிமுக தலைமைக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிடவேண்டும்" எனக் கூறியுள்ளார்.
தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை
இந்த மனு நாளை மறுநாள் (செப்.20) தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: பெண் மருத்துவரின் உயிரை காவு வாங்கிய சுரங்கப் பாதை!