சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (பிப்ரவரி 19) நடைபெறவுள்ள நிலையில் கண்காணிப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தச் சென்னையில் கூடுதலாக 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை ரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ககன்தீப் சிங் பேடி கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை வாகனங்களைத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஜயராணி, மாநகராட்சி துணை ஆணையர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.
![ககன்தீப் சிங் பேடி பறக்கும்படை வாகனங்களைத் தொடக்கி வைத்தார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-corporation-election-script-image-7209208_17022022121145_1702f_1645080105_860.jpg)
பறக்கும் படை வாகனங்களைத் தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளரைச் சந்தித்த மாவட்டத் தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி, "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதற்கு மேல் யாரும் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது. சென்னையில் 90 பறக்கும் படையினர் கண்காணிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபடுவார்கள்.
தேர்தல் தொடர்பான விதிமீறல்களுக்கு இலவச தொலைபேசி எண் 1800 425 7012 அழைத்தால் பறக்கும் படை குழுக்களும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக 69 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
![ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-corporation-election-script-image-7209208_17022022121145_1702f_1645080105_893.jpg)
தேர்தல் நேரத்தில் பல்வேறு வேட்பாளர்கள் போஸ்டர்கள் ஒட்டிவருகின்றனர். இதனை அனுமதிக்க முடியாது. மேலும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போஸ்டர்கள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன. மீறி போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
போஸ்டர், ஸ்டிக்கர் ஓட்டும் வேட்பாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டு வேட்பாளர் தேர்தல் செலவில் சேர்க்கப்படும். மேலும் இரவு அதிகாலை என இரண்டு நேரங்களில் அதிகப் பணம் பட்டுவாடா, பொருள்கள் கொடுப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. எனவே, பறக்கும் படையினருக்கு அதிகாலை, இரவு நேரங்களிலும் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் ஆயிரத்து 121 இடங்களில் நேரடியாக Live streaming மூலம் கண்காணிக்க உள்ளோம். வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டால் அதைச் சரிசெய்ய 27 பொறியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தீண்டாமை? தீட்சிதர்கள் மீது வழக்கு