கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் கடந்த 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகர போக்குவரத்து சேவை நாளை காலை முதல் மீண்டும் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பேருந்து பராமரிப்பு பணிகள் சென்னை பல்லவன் சாலையில் உள்ள பணிமனை உட்பட அனைத்து பணிமனைகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பேருந்துகளை தூய்மைப்படுத்துவது, கிருமி நாசினி தெளிப்பது, சக்கரத்தில் காற்றழுத்தத்தை உறுதிப்படுத்துவது, பேட்டரிகள் சரியாக உள்ளதா என சரிபார்ப்பது உள்ளிட்ட பணிகளில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் நிலையான வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "கடந்த மே மாதம் சென்னையை தவிர்த்து மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையான வழிமுறைகளை சென்னை போக்குவரத்து ஊழியர்கள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும்.
பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருப்பதை பேருந்து பணியாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
பேருந்தின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் முக கவசம் அணிவதோடு கையுறைகளையும் அணிய வேண்டும். பயணிகள் பேருந்தில் ஏறும்பொழுது பேருந்தில் வைக்கப்பட்டுள்ள கிருமி நாசினிகள் மூலம் கைகளை சுத்தம் செய்திடல் வேண்டும். தனிநபர் இடைவெளியினை கட்டாயம் பின்பற்றிட வேண்டும். பேருந்தின் பின்புறமாக ஏறி முன்புறாக இறங்கிட வேண்டும்.
பேருந்துகளையும், உள்ளாட்சி அமைப்புக்கு உட்பட்ட பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் நாள்தோறும் இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு வழங்கப்படும் பாட்டில் வடிவிலான கிருமி நாசினியும் முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
தற்போதைய சூழலில் பேருந்துகளில் 50 சதவிகித பயணிகளை மட்டுமே பயணிக்க அனுமதிக்க வேண்டும்.
நின்று பயணம் செய்பவர்களுக்கு இடையே 6 மீட்டர் இடைவெளியை பின்பற்றப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். பயணிகள் அமரும் இருக்கைகளில் குறியீடுகள் வரைவது வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.