தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 'பாஜக சார்பில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட பின், நவம்பர் 16ஆம் தேதிக்கு பிறகு மத நிகழ்ச்சிகளுக்காக நூறு பேர் வரை கூடலாம் என அரசாணையாக தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
ஆனால், அக்டோபர் 15ஆம் தேதிக்கு பின் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வழிகாட்டு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தி, மத்திய அரசு அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை செல்லாது என அறிவித்து, ரத்து செய்ய வேண்டும். நவம்பர் 8 முதல் தொடங்க உள்ள வேல் யாத்திரையில் தலையிடக்கூடாது என அரசுக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும்.
அமைச்சர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மீறி, தமிழ்நாடு அரசு, இந்த அரசாணையை பிறப்பித்துள்ளது. வேல் யாத்திரை சுமூகமாக செல்ல ஏதுவாக அனைத்து மாவட்ட காவல்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க தமிழ்நாடு தலைமைச் செயலருக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் ஹேமலதா அமர்வில் இன்று (நவ. 7) அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.