சென்னை மாங்காடு பரணி புதூரைச் சேர்ந்தவர், ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன். இவர் ஆறு மாதங்களுக்கு முன்பு பைனான்ஸ் நிறுவனம் மூலம் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கினார்.
ஆனால், மாதாந்திர கடன் தொகையை சரிவரச் செலுத்தவில்லை.
இந்த நிலையில் வெங்கடேசன் அந்த வாகனத்தை எம்ஜிஆர் நகரில் வசிக்கும் தனது நண்பர் பெயிண்டர் ராஜா என்பவர் மூலம் அரும்பாக்கம் எம்எம்டிஏ பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரிடம் விற்றுள்ளார்.
மாதாந்திர தவணையும் செலுத்தாமல், வாகனத்தையும் திருப்பித் தராமல் இருந்ததால் பைனான்ஸ் நிறுவனம் வெங்கடேசனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது. இதையடுத்து வெங்கடேசன் ராஜாவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். இரு சக்கர வாகனத்தை பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
வாகனத்தை வாங்கிய முருகன் தற்போது எங்கு இருக்கிறார் என ராஜாவிடம் கேட்டுள்ளார். முருகன் தற்போது இருக்கும் இடம் எனக்குத் தெரியாது என ராஜா பதிலளித்துள்ளார். ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் பரத், ஜெயராஜ் ஆகிய 3 பேரும் நேற்று நள்ளிரவு எம்ஜிஆர் நகர் வந்துள்ளனர்.
முருகன் இருக்கும் இடத்தைக் காட்ட வேண்டும் எனக்கூறி ராஜாவை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி போரூர் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு ராஜாவுக்கு மது வாங்கி கொடுத்து முருகன் இருக்கும் இடத்தை சொல் எனத் தாக்கியுள்ளனர். அப்போது ராஜா செல்போனில் தனது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு, தன்னை வெங்கடேசன் உள்ளிட்டோர் கடத்தி வைத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ராஜாவின் குடும்பத்தினர் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். செல்போன் சிக்னல் உதவியுடன் எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் ராஜாவை மீட்டனர்.
அவரைக் கடத்தியதாக ஆட்டோ டிரைவர் வெங்கடேசன், ஜெயராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
கடத்தலுக்குப் பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இருசக்கர வாகனத்தை வாங்கிய முருகனை தற்போது காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு; காவலரை கல்லால் தாக்கிய கணவன், மனைவி கைது!