சென்னை: ராணுவப் பயிற்சிக் கமாண்ட், சென்னை ஐஐடி நிறுவனத்துடன் இணைந்து இந்தூரில் உள்ள ராணுவ தொலைத்தொடர்புக் கல்லூரியில் 5ஜி (டெஸ்ட் பெட்) சோதனை நடத்த இன்று (ஜூன் 20) ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய ராணுவத்தில் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தவும் குறிப்பாக எல்லைப் பகுதிகளில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ராணுவப் பயிற்சி கமாண்ட் சிம்லா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் எம்.யு.நாயர் மற்றும் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி இடையே இன்று கையெழுத்தானது.
இதுகுறித்து 5ஜி டெஸ்ட்பெட் திட்டத்திற்கு தலைமை தாங்கும் சென்னை ஐஐடி பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறுகையில், "5ஜி போன்ற சமீபத்திய தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் ஆயுதப் படைகளுக்கு மிகவும் பொருத்தமானவையாகவும் உதவியாகவும் இருக்கும். ராணுவக் கல்லூரியில் உள்ள மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு 5ஜி அமைப்பில் உள்ள மேம்பட்ட தொழில் நுட்பங்களை நன்கு அறிந்துகொள்ள இந்த திட்டம் உதவியாக இருக்கும்" என்றார்.
இந்திய ராணுவம் மற்றும் சென்னை ஐஐடி இடையேயான இந்த திட்டம் வருங்காலங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் 5ஜி தொடர்பாக சென்னை ஐஐடி ஆலோசனை, ஆய்வுகள் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'அக்னிபத்' திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேர ஜூலை முதல் விண்ணப்பிக்கலாம்!