சென்னை விமான நிலையத்தில் இன்று 48 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில் டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், விஜயவாடா, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 24 விமானங்களில் சுமாா் மூன்றாயிரத்து 100 பயணிகள் பயணச்சீட்டு முன்பதிவு செய்துள்ளனர்.
அதைப்போல் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் 24 விமானங்களில் சுமாா் ஆயிரத்து 100 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
இன்று ஒரேநாளில் சென்னை விமான நிலையத்தில் 48 உள்நாட்டு விமானங்களில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் இன்றுதான் அதிக அளவிலான பயணிகள் பயணம் செய்கின்றனர். ஆனாலும் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைவாக உள்ளது.
இ-பாஸ் கட்டாயம், 14 நாள்கள் தனிமைப்படுத்துதல், கைகளில் முத்திரைக் குத்துவது ஆகியவை பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உள்நாட்டு விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு விமான நிறுவனங்கள் பயணிகளிடம் பயணச்சீட்டு கட்டணம் அதிகமாக வசூலிப்பதாகப் பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. குறைந்த கட்டணமாக ஆறாயிரத்து 500 என இணையத்தில் காட்டுகிறது. ஆனால் பயணிகள் பதிவுசெய்யும்போது இருக்கைகள் இருப்பு இருப்பதில்லை.
அடுத்தக் கட்டணமான 15 ஆயிரத்து 500 ரூபாய்க்குப் பதிவுசெய்யும்படி இணையத்தில் வருகிறது. அந்தப் பயணச்சீட்டும் ஓரிருவருக்கு மட்டுமே கிடைக்கிறது. அடுத்து 29 ஆயிரத்து 500 ரூபாய்க்குத்தான் பயணச்சீட்டு இருப்பிலுள்ளது.
அதைப்போல் டெல்லி, அந்தமான், மதுரை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பல நகரங்களுக்கான விமான பயணக்கட்டணங்களும் வழக்கமான தொகையைவிட கூடுதலாக வசூலிப்படுவதாகப் பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் விமான பயணம் மேற்கொள்ள தயங்குகின்றனர்.
ஆனால் புறப்பாடு பயணிகளைப் பொறுத்தமட்டிலும், சென்னையின் கரோனா தாக்குதலுக்குப் பயந்து எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுத்து பயணச்சீட்டு எடுத்து சொந்த ஊர் திரும்புகின்றனர்.
எனவேதான் சென்னையிலிருந்து செல்லும் விமானங்களில் பயணிகள் அதிகமாகவும், சென்னைக்கு வருகின்ற விமானங்களில் பயணிகள் குறைவாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மனிதனின் மிருகத்தன்மை: பார்வையை இழந்த நாய்