சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (செப்.1) காலை 10 மணிக்கு கூடியதும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது சட்டப்பேரவை உறுப்பினர் அசோகன் பேசுகையில், சிவகாசி பகுதியில் 30 கிராமங்கள் உள்ளன. இங்கு கால்நடைகள் அதிகமாக உள்ளன. இப்பகுதிக்கு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைத்து தரப்படுமா? எனக் கேள்வி எழுப்பினார்.
கால்நடை மருத்துவமனை
அதற்கு பதில் அளித்து பேசிய கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், 60 கி.மீ தூரத்தில் நெல்லையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. ஆகவே புதிதாக கால்நடை மருத்துவமனை தேவையில்லை. சங்கரன்கோவிலில் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது என்றார்.
இதனையடுத்து பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் செழியன், தஞ்சை, திருவிடைமருதூர் பகுதியில் கால்நடைகள் அதிகமாக இருப்பதால் அங்கு புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என கேரிக்கை விடுத்தார்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகள் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் (விளாத்திக்குளம்) பேசுகையில், தூத்துக்குடி பகுதியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைத்து தர ஆவன செய்யப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
அனைவரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், நிச்சயமாக அனைவரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.
இதையும் படிங்க: அரசு வேலை - மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படும்