சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், தனியார் மருத்துவமனைகளுக்கு சமமாக, குறைந்த கட்டணத்தில் முழு உடற்பரிசோதனை செய்ய ‘அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை’ 2016ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இதில், கோல்ட் பரிசோதனைக்கு 1,000 ரூபாய்; டைமண்ட் பரிசோதனைக்கு 2,000 ரூபாய்; பிளாட்டினம் பரிசோதனைக்கு 3,000 ரூபாய் எனக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், 2018இல், ‘அம்மா உடல் பரிசோதனை மையம்’ தொடங்கப்பட்டது. இங்கு கோல்டு, டைமண்டு, பிளாட்டினம் ஆகியவை உள்ளடக்கிய பரிசோதனைகளுடன், நுரையீரல், விரிவான கண் பரிசோதனை, பார்வைக் குறைபாடு, கண் நரம்பு, மூச்சாற்றல் அளவி ஆகியவை, ரூ.4,000 கட்டணத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில், அம்மா முழு உடல் பரிசோதனை மையம்’ என்றிருந்த திட்டத்தின் பெயரை, ’அதிநவீன முழு உடல் பரிசோதனை திட்டம்’ எனப் பெயர் மாற்றப்பட்டு, பெயர்ப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது, ”ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள, முழு உடல் பரிசாதனை மையத்தில், நவீன உபகரணங்களுடன் கூடிய கூடுதல் பரிசோதனைகள் இணைக்கப்பட்டுள்ளது. அதன் சிறம்பம்சத்தை வெளிப்படுத்தவே, ‘அதிநவீன முழு உடல் பரிசோதனை மையம்’’ எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 500 நியாயவிலைக் கடைகளுக்கு சொந்தக் கட்டடம்: அமைச்சர் ஐ.பெரியசாமி தந்த அறிவிப்பு!