சென்னை: அம்பத்தூர் பானு நகர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரோஸ்மேரி(72). இவரது கணவர் சேவியர் இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்துவருகின்றனர். இதற்கிடையில், ரோஸ்மேரி தனது வீட்டில் தனியாக வசித்துவந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவருக்கு மூட்டு வலி ஏற்பட அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர், அவர் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்துள்ளார். இவருக்கு தினமும் மகன்கள் மூன்று வேளை சாப்பாடு கொடுத்து வந்துள்ளனர். எல்லாருக்கும் சுமையாக இருக்கிறேன் என கடந்த சில நாட்களுக்கு முன்பு புலம்பிவந்த ரோஸ்மேரி, நேற்று மதியம் வீட்டிற்குள் இருந்தவாறே மண்ணெண்ணெய் ஊற்றி உடலுக்கு தீ வைத்துக்கொண்டார்.
வீட்டிலிருந்து புகைவருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, ரோஸ்மேரி உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுதொடர்பாக தகவலறிந்துவந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பிவைத்தனர். மேலும், தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதுபோன்ற தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினைத் தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிடவும் அரசும் சினேகா போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் காத்துள்ளன.”
உதவிக்கு அழையுங்கள்:
அரசு உதவி மையம் எண் - 104 சினேகா தன்னார்வத் தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060
இதையும் படிங்க: கோவையில் தற்கொலையை தடுக்க சிறப்பு ஆலோசனை மையம்