சென்னை: 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தயாரிக்கப்பட்ட பெல் 412EP ரக ஹெலிகாப்டர் தமிழ்நாடு அரசிடம் உள்ளது. இந்த ஹெலிகாப்டர் சென்னை மீனம்பாக்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இயக்கப்படாமல் உள்ளது.
அரசு முறைப் பயணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் இந்த ஹெலிகாப்டர் இதுவரை 2,449 மணி நேரம் பறந்துள்ளது. இதில் 14 பேர் பயணிக்கலாம். இதனைப் பேரிடர் காலங்கள், அவசரப் பயணங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் தயார் செய்துள்ளனர்.
இந்த ஹெலிகாப்டரை ஏர் ஆம்புலன்ஸாக மாற்றி மருத்துவப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவது தொடர்பாக சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு மருத்துவமனைகளில் ஏர் ஆம்புலன்ஸ் இறங்குவதற்கான திட்டத்தைத் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் மருத்துவமனைகள் 2017ஆம் ஆண்டு ஏர் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காவலர்களை நேரில் வரவழைத்துப் பாராட்டிய டிஜிபி