சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து எதிர்க்கட்சியான ஆளும் திமுக பல்வேறு தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடுவதாக அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், கிண்டி ஆளுநர் மாளிகையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், சிவி சண்முகம், பெஞ்சமின் ஆகியோர் நேற்று (பிப். 12) ஆளுநரைச் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
திமுகவின் கைப்பாவையாக மாநில தேர்தல் ஆணையம்
ஆளுநரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்கள், “ நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சுயேச்சை, மற்ற கட்சியினர் செல்வாக்கு பெற்றுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது.
அதில் தேர்தல் நடைபெறும் இடங்கள், பொதுக்கூட்டங்கள், பணப்பட்டுவாடா போன்றவற்றை திமுக காவல் துறையின் உதவியுடன் செய்வதாகவும் தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாக செயல்படுவதாக ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மாநில தேர்தல் ஆணையம் விருப்பு வெறுப்பு இல்லாமல், ஜனநாயக தன்மையோடு செயல்பட வேண்டும். எனவே சுதந்திரமாக நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது மாநில தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க திமுகவின் கைப்பாவையாக செயல்படுகிறது. திமுகவின் அராஜகதிற்குத் துணை போகிறது. திமுகவின் மாநில தேர்தல் பிரிவு செயலாளர் போல மாநில தேர்தல் அலுவலர்கள் செயல்படுகிறார்கள்.
அதிமுக வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகள் நடமாட்டம் அதிகமாகியுள்ளது. திமுகவிற்கு ஏற்றார் போல விதிகளை மாற்றி அமைக்கிறார்கள். இதுகுறித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு முறையில் தேர்தல் நடத்துவதால், சீல் உடைக்கும் போது காணொலியில் பதிவு செய்ய வேண்டும் என்கிற விதி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 22 அதிமுக வேட்பாளர்களின் மனுக்களை திரும்பப் பெற வைத்துள்ளனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். ஒருபக்கம் தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் உள்ளது, மறுபக்கம் காவல் துறையினர் அதிமுகவினரை மிரட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
கோயம்புத்தூர், சேலம், ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் குற்றவாளிகள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அதிமுகவினரை மிரட்டுகிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. கடம்பூரில் மூன்று வார்டுக்கு மட்டும் தேர்தல் நிறுத்தாமல், அனைத்து வார்டுகளுக்கும் ரத்து செய்துள்ளது தவறானது. இதில், திமுகவிற்கு தேர்தல் ஏஜென்டாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது எனத் தெளிவாகக் காட்டுகிறது.
தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக கடம்பூர் டவுன் பஞ்சாயத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி வேட்பாளர் ஜானகிராமன், கொலை மிரட்டல் காரணமாகத் தற்கொலை செய்துள்ளார். ஆள் மாறாட்டம் செய்துள்ளனர். இதுவே தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதற்கான சாட்சி.
ஒரே நாடு, ஒரே தேர்தல்
இவையெல்லாம், தலைமை செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோருக்குத் தெரிந்து நடைபேறுகிறதா இல்லை இவர்கள் திமுகவிற்கு உடந்தையாக உள்ளார்களா என்பது தெரியவில்லை. திமுகவின் ஆர்மியாக தமிழ்நாடு காவல் துறை செயல்படுகிறது. எங்களது ஆட்சியில் நேர்மையான அலுவலர்கள் எனப் பெயர் எடுத்தவர்கள் அமைதியாக இருக்கிறார்கள், இல்லை துணை போகிறார்கள். இதை அனைத்தையும் தொகுத்து ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளோம் .
ஆட்சிக்கு வந்தால் மட்டும் திமுகவினர் மாநில சுயாட்சி பற்றி பேசுவார்கள். உதயநிதி பரப்புரைகளில் தேர்தல் விதிகள் பின்பற்றப்படுவதே கிடையாது. ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால், அது 2024இல் நடைபெறும், அப்போது அதிமுக வெற்றி பெறும் என தெரிவித்தோம். அந்த சட்டம் கொண்டுவரும் போது அதன் மீதான நிலைப்பாட்டை அதிமுக தெரிவிக்கும்” எனத் தெரிவித்தனர்.