சென்னை: கடந்த 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களிடையே அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த கலவரச்சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான 15 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 400 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கலவரத்தின்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள் மற்றும் இருப்புத்தொகை உள்ளிட்டவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருடிச்சென்று விட்டதாக கடந்த சனிக்கிழமை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக எம்.பி., சி.வி.சண்முகம் புகார் அளித்தார். இந்தப் புகார் பொய்யானவை என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஜே.சி.டி பிரபாகர் நேற்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் எதிர் புகார் ஒன்றை அளித்தார்.
இந்நிலையில் காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தபால் மூலமாக டிஜிபி அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் உள்துறைச்செயலாளருக்கு சி.வி.சண்முகம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
தபாலில் இருந்தது என்ன? அந்தப் புகாரில் கலவரத்தில் காயமடைந்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 15 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், கலவரத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மேலும் கலவரத்தின்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், பத்திரங்களை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவரது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்வதை வீடியோ ஆதாரங்களாக போலீசாரிடம் சமர்ப்பித்து, புகார் அளித்தபோதும் இதுவரை ராயப்பேட்டை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார். ராயப்பேட்டை போலீசார் இச்சம்பவம் நடந்த இடமான அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து எந்தவித கைரேகைப் பதிவு மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் புகாரின்படி போலீசார் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரத்தை தடுத்திருக்கலாம் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்ததாகவும், இதிலிருந்தே போலீசாரின் அலட்சியப்போக்கு தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால் உடனடியாக அதிமுக கலவரம் மற்றும் தலைமை அலுவலக திருட்டு வழக்கை சிபிஐ அல்லது பிற ஏஜென்சிகளுக்கு மாற்ற வேண்டும் எனப் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவில் புதிய பதவிகளுக்கான பட்டியல் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்கப்படும் - வைத்திலிங்கம்