சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று தமிழ்நாடு திரும்பிய சசிகலாவிற்கு அதிமுக கொடியுடன் கூடிய கார் வழங்கிய அதிமுக நிர்வாகி உட்பட ஏழு பேரை நேற்று மாலை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டது.
சசிகலா சிறை சென்றதிலிருந்து அமைதி காத்த அவரது ஆதரவாளர்கள், சசிகலாவின் வருகையையொட்டி பல இடங்களில் பேனர், போஸ்டர்களை அதிமுக தொண்டர்கள் சிலர் ஒட்டினர். இதைத் தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியவர்களை, கட்சியின் கொள்கை, கோட்பாட்டிற்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிமுக தலைமை நீக்கியது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று பெங்களூரு விமானநிலையம் அருகே இருந்த தனியார் விடுதியில் தங்கியிருந்த சசிகலாவை சந்திக்க முயற்சி செய்த கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜையும் அதிமுக தலைமை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று தமிழ்நாட்டுக்குள் அதிமுக கொடி கட்டிய காரில் வர சசிகலாவுக்கு காவல்துறை அனுமதிக்காத போது, தனது காரை வழங்கிய கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் சம்பங்கி உள்ளிட்ட ஏழுபேரை அதிமுக தலைமை நேற்று மாலை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது.
![அதிமுக சசிகலா admk sasikala AIADMK leadership AIADMK cadres behind Sasikala சசிகலா பின் அணி திரளும் அதிமுக தொண்டர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10561118_3.jpg)
பெங்களூருவிலிருந்து இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்ட சசிகலா 23 மணி நேர நீண்ட பயணத்திற்கு பின் தியகராய நகர் இல்லத்திற்கு வந்தடைந்தார். தென் மாவட்டங்களில் இருந்து அதிகப்படியான தொண்டர்கள் திரண்டு வந்து சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விடிய, விடிய விழித்திருந்து சசிகலாவின் ஆதரவாளர்கள் அவருக்கு சென்னை எல்லையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமுமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி, சசிகலா அவர்களின் பின்னால், பல நூறு அதிமுக தொண்டர்கள் அணி திரள்வார்கள், தொண்டர்கள் அவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றனர். எவ்வளவு பேரை கட்சியிலிருந்து நீக்கி விட்டு யாருக்காக கட்சி நடத்தப்போகிறார்கள். பொது எதிரியான திமுகவை எதிர்த்து கட்சி பணியாற்றுகிறோம், நாங்கள் ஜெயலலிதாவின் அணி" என்றார்.
![அதிமுக சசிகலா admk sasikala AIADMK leadership AIADMK cadres behind Sasikala சசிகலா பின் அணி திரளும் அதிமுக தொண்டர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10561118_2.jpg)
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கட்சி கண்டிப்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்த வைகைச்செல்வன்,"சசிகலாவை நாங்கள் முதலில் ஏற்றுக்கொண்டோம். ஆனால், மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையே, மக்கள் ஏற்காதபோது சாதாரண தொண்டன் அதிமுகவை தலைமை தாங்குவது தான் சரியாக இருக்கும்" என்றார்.
இந்த வரவேற்பு குறித்து பேசிய மூத்த பத்திரிக்கையாளர் ஆர். ராதாகிருஷ்ணன், இந்தக் காலத்தில், அதிகாலை வரை காத்து இருந்து தொண்டர்கள் வரவேற்பு அளிக்கின்றனர் என்றால் அது சசிகலா அவர்களுக்கு தான், இவர்களது பலமே தொண்டர்கள் தான். பலமான தொண்டர்கள் படை உள்ளதால் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது" என்றார்.
![அதிமுக சசிகலா admk sasikala AIADMK leadership AIADMK cadres behind Sasikala சசிகலா பின் அணி திரளும் அதிமுக தொண்டர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10561118_p.jpg)
அதிமுக கட்டுகோப்பான கட்சி என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை தான். தற்போது உள்ள தொண்டர்கள் முடிவுகளை தீர்க்கமாக, கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ஆளுமையான தலைமைகளைத் தேடுவதாக தெரிகிறது. வரும் காலத்தில் நிறைய பேர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என அரசியல் விமர்சகர்கள் சூசகமாக தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சசிகலாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?