சென்னை: தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சியில் மறைமுகத்தேர்தலின்போது, திமுக கவுன்சிலர் கடத்தப்பட்டதாக கூட்டணிக் கட்சியினர் ரகளையில் ஈடுபட்டதால், தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
காவல்துறை பாதுகாப்புடன், தாமதமின்றி மறைமுகத் தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட 8 உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
பொய் வழக்கு
அவர்களின் மனுவில், ''மறைமுகத்தேர்தல் நாளன்று மூன்று திமுக உறுப்பினர்கள் வராததால், கூட்டணி கட்சியைச்சேர்ந்த உறுப்பினர்கள் வேட்புமனுக்களைப் பறித்து, கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. பொய் வழக்கில் எங்களை சிறையில் அடைத்துவிட்டு மறைமுகத்தேர்தல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிசிடிவி கேமரா பதிவு
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, மறைமுகத் தேர்தல் நாளன்று சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று (மார்ச். 15) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிசிடிவி கேமரா பதிவுகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது.
கடத்தப்பட்டதாகப் புகார்
அப்போது மனுதாரர்கள் தரப்பில், திமுக கவுன்சிலர் மாலதி கடத்தப்பட்டதாக தங்களுக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டதாக காவல்துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த நாளன்று மாலையிலேயே, அவர் பதிவு தபாலை கையெழுத்திட்டு வாங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே, தவறான அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த திருவிடைமருதூர் காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்த பின்னர் வழக்கை விசாரிப்பதாகக் கூறி, விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: முகமது ஷமியிடம் பீஸ்ட் அப்டேட் கேட்ட விஜய் ரசிகர்கள்