கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம், குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் தலைமையில் இன்று (ஆக.19) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கூடுதல் காவல் ஆணையர் தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் முடிவில்.,
• அவசரத் தேவைக்காக வழங்கப்பட்டு வந்த அனுமதி (இ-பாஸ்) எளிமையாக்கப்பட்டு, தகுந்த காரணங்கள் இருப்பின் உடனடியாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் சென்னையை நோக்கி வரும் நபர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் நேற்று (ஆக.18) ஒரே நாளில் மட்டும் 18 ஆயிரத்து 823 நபர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பயண அனுமதி பெற்று வரும் நபர்களை கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்த கண்காணிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொள்ளவேண்டும்.
• தொழிற்சாலை, இதர அலுவலங்களில் வேலை காரணமாக வரும் நபர்களின் தகவலை, அந்தந்த மண்டல அலுவலர்கள் சேகரித்து, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பின் மாநகராட்சி அலுவலர்கள், அந்நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்யவேண்டும்.
• கோடம்பாக்கம், வளசரவாக்கம், அம்பத்தூர், கிண்டி ஆகிய பகுதிகளுக்கு வியாபார ரீதியாக வெளி மாவட்டங்களுக்கு சென்று வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதனால் அப்பகுதிகளுக்கு வருகை தரும் நபர்களின் தகவல்களை சேகரித்து, அவர்களை முறையாக தனிமைப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• மாநகராட்சி வழிமுறைகளை பின்பற்றாத நபர்களின் மீதும், தகுந்த இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், அலுவலர்களின் மீதும் காவல்துறையினர் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
என அலுவலர்களுக்கு குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி - மாற்றுத்திறனாளி மாணவியின் கல்விக் கனவு நிறைவேறியது!