சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (40). இவரின் வீட்டின் அருகே ஏழுமலை (41) என்பவர் வசித்துவருகிறார். சீனிவாசனின் 20 வயது மகள் குளிக்கச் செல்லும்போது அடிக்கடி ஏழுமலை குளியலறை அருகில் நிற்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட சீனிவாசன் பலமுறை ஏழுமலையை எச்சரித்துள்ளார். இருந்தபோதிலும், மீண்டும் நேற்று (ஜன. 27) இது போன்ற செயலில் ஏழுமலை ஈடுபட்டுள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து சீனிவாசனிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து நேற்றிரவு (ஜன. 27) திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய ஏழுமலையை, வழிமறித்த சீனிவாசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது சீனிவாசன் ஆத்திரத்தில் தான் மறைத்துவைத்திருந்த சிறிய கத்தியால் சரமாரியாக ஏழுமலையைத் தாக்கியுள்ளார். மேலும், ஏழுமலை தாக்கப்படுவதைத் தடுக்கச் சென்ற அவரது மனைவி, குழந்தைகளுக்கும் கத்தியால் வெட்டு விழுந்தது. இந்தச் சம்பவத்தில் ஐந்து பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் காவல் துறையினர், காயமடைந்தவர்களைச் சிகிச்சைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக அவர்கள் அங்கிருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக சீனிவாசன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த சேலையூர் காவல் துறையினர், அவரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சீர்காழி நகைக் கொள்ளை: 17கிலோ தங்கம் பறிமுதல்... மூவர் கைது, ஒருவர் சுட்டுக் கொலை!