சென்னையை அடுத்த பல்லாவரம் ராணுவ மைதானம் அருகே உள்ள சாலையில் நேற்றிரவு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் முகத்தில் காயங்களுடன் ஆண் உடல் ஒன்று கிடப்பதாக அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பல்லாவரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில், இறந்தவர் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஆனந்தன்(45) என்பது தெரியவந்துள்ளது. மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ஆனந்தன், சில நாட்களாக ஜாபர்கான்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார் எனவும், சில தினங்களுக்கு முன்பு உறவினர்களிடம் திருவண்ணாமலை செல்வதாகக் கூறிவிட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இவர் எப்படி இங்கு வந்தார், யாரேனும் இவரை கொலை செய்து இங்கு வீசிச் சென்றனரா? எனப் பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவல் துறையினர் ஆய்வு செய்துவருகின்றனர்.
கொலைச் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து அருகிலுள்ள மதுபானக் கடையில் குடித்துவிட்டு இரவில் ராணுவ மைதான புதர் பகுதியில் பல சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. எனவே ஆனந்தன் இரவில் மது குடிக்க வந்து அங்கு ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மது போதையால் 2மாத பெண் குழந்தையை கொலை செய்த தந்தை!