சென்னை: பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ராயபுரத்தை சேர்ந்த சங்கர் நாகராஜன், பல்லாவரத்தை சேர்ந்த முகமது அலி, மும்பையை சேர்ந்த முகமது யூசுப், தண்டையார்பேட்டையை சேர்ந்த ஜமால் முகமது ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் கவர்களில் கிலோ கணக்கில் வெள்ளி நகைகள் இருந்தன. தொடர்ந்து நால்வரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
4 பேரும் தங்களுடைய உள்ளாடைக்குள் தங்கத்தையும் ரகசியமாக மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 48 லட்சத்து 57 ஆயிரம் மதிப்புள்ள 95 கிலோ 380 கிராம் வெள்ளி நகைகளையும் , 15 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள 343 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
4 பேரிடமும் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்படவிருந்த உலோக சிலைகள் மீட்பு