சென்னை: தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண் / பெண்) காவலர் நிலை -1 , தலைமைக் காவலர், ஹவில்தார் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3 ஆயிரம் பணியாளர்களுக்கு 'தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்' வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல்நிலை வார்டர்கள் (ஆண் / பெண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண் / பெண்) நிலைகளில் 60 பேர்களுக்கும் 'தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள் ’ வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
மேற்படி நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் வழங்கப்படும். காவல் வானொலி பிரிவு , நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் என ஆக மொத்தம் ஆறு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு ' தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம் ' வழங்கப்படும்.
இந்தப் பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தகுந்தவாறு ரொக்கத் தொகை வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் பிறிதொரு நாளில் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஸ்.. மாஸ்க் போடுங்க.. இனி ரூ.200 இல்ல ரூ.500- தமிழ்நாடு அரசு அதிரடி