சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக கடந்த சில நாள்களாக ஓரளவு கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மக்களுக்கு போட தடுப்பூசிகள் இல்லாததால் கரோனா முகாம்கள் மூடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.
இந்நிலையில், புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 31 பார்சல்களில் 977 கிலோ எடையில் சுமார் 3.65 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தடைந்தன. இதனை சுகாதாரத்துறை அலுவலர்கள் பெற்று கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநிலத் தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.