சென்னை தியாகராயநகர் சாரதாம்பாள் தெருவில் வசித்துவருபவர் தொழிலதிபர் நூரில் ஹக் முஸ்தபா. இவரது உறவினர் மொய்தீன். இவர்கள் இருவரும் வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இவர்களது வீட்டில் நுழைந்த எட்டு பேர் கொண்ட கும்பல், அவர்களை கத்தி, அரிவாள் ஆகியவற்றை காண்பித்து மிரட்டி, அவர்களிடமிருந்து 250 சவரன் நகை, கார் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
கொள்ளையடித்ததோடு வீட்டிலிருந்த முஸ்தபா, மொய்தீன் ஆகியோரை கடத்திச் சென்று, பின்னர் முஸ்தபாவை மட்டும் கொள்ளை கும்பல் இறக்கிவிட்டுச் சென்றது. இந்த வழக்கில் பாண்டி பஜார் காவல் துறையினர் மூன்று தனிப்படை அமைத்து, கொள்ளை கும்பலைப் பிடிக்க தூத்துக்குடி விரைந்தது.
முதற்கட்ட விசாரணையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, கடத்தப்பட்டதாக கூறப்பட்ட உறவினர் மொய்தீன்தான் இந்தக் கொள்ளை சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது. கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட முஸ்தபாவிற்கு இந்தக் கொள்ளையில் தொடர்பு இல்லை எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில் இந்தக் கொள்ளை சம்பவமே கடனை திருப்பி தராததால் நடந்துள்ளதாகவும், முஸ்தாபின் தந்தை ரூபில், கொள்ளை வழக்கில் தேடப்பட்டுவரும் மொய்தீனுக்கு தொழில் ரீதியாக 40 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் எனக் கூறப்படுகிறது. ரூபில் குடும்பம், நூரில் ஹக் குடும்பத்துடன் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
பணத்தை வாங்குவதற்கு தான் மொய்தீன் ஒரு வாரமாக இந்த வீட்டில் தங்கியிருந்ததாகவும், பணம் தற்போது இல்லை என கூறியதால் ஆட்களை வரவழைத்து ரூபில், நூரில் ஹக் என இரு குடும்பத்திற்கும் சொந்தமான நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளனர் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தனிப்படை காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்தும், செல்போன் சிக்னலை வைத்தும் கொள்ளைக் கும்பல் தப்பிச்சென்ற தடயங்களைப் பின்தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், கொள்ளை நடந்த வீட்டில் நான்கு பேருக்கு கரோனா ஏற்பட்டு தனிமையில் இருந்தது தெரியாமல் பாண்டி பஜார் காவல் துறையினர், வீட்டில் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர், கரோனாவால் பாதிக்கபட்ட முஸ்தபாவையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர். இதனால் பாண்டிபஜார் காவல் நிலையத்தை கிருமி நாசினி கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.
இதையும் படங்க: வயதான தம்பதியினரை கட்டிபோட்டு 250 சவரன் நகைகள் கொள்ளை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!