சென்னை அடுத்த பல்லாவரம் நகராட்சி சார்பில் கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்றது. முதல் நாளான இன்று (ஏப். 28) குரோம்பேட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நகராட்சி ஆணையர் மதிவாணன் தலைமையில் நடைபெற்றுவருகிறது.
கரோனா தடுப்பூசி
இதனை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், சுகாதாரத் துறை அலுவலர்கள், திட்ட இயக்குநர் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த முகாமில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கலந்துகொண்டு, கோவிஷீல்டு தடுப்பூசியினைச் செலுத்திக்கொள்ள ஆர்வத்துடன் வருகின்றனர்.
![செங்கல்பட்டு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02:52:06:1619601726_tn-che-03-corona-veccine-camp-visual-script-7208368_28042021143215_2804f_1619600535_557.png)
தடுப்பூசி குறித்து செய்தியாளரிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்,
"பல்லாவரம், தாம்பரம் நகராட்சி, பேரூராட்சிகள் ஒட்டிய பகுதிகளில் சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம், பொழிச்சலூர் ஊராட்சிப் பகுதிகளில் தற்போதுவரை பலர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுவருகிறார்கள்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை இப்பகுதியிலுள்ள அதிகமான மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகிறது.
இதைத்தொடர்ந்து, மாநில அரசும் தேவையான அளவுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு மருந்தை அளித்துவருகின்றனர். 35 ஆயிரம் தடுப்பூசிகள் கையில் உள்ளன.
மேலும், புதிதாக தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரை 1,800 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 200 படுக்கைகள் மட்டும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. செங்கல்பட்டை பொறுத்தவரை ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.